March 21, 2018
தண்டோரா குழு
மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற காவலர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றிவரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர்.
மேலும், ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாக தேனி மாவட்ட எஸ்பி மற்றும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மீது காவலர்கள் இருவர் குற்றம்சாற்றியுள்ளார்.இந்நிலையில், இது தொடர்பாக தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,
காவலர் கணேஷின் நடவடிக்கைகள் தொடர்ந்து சரியில்லை.பணியை சரியாக மேற்கொள்ளாததால் உயர்அதிகாரிகள் அளித்த அறிக்கையின் படி அவரை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தோம்.அதே போன்று ரகு என்ற காவலரை அவசர காலங்களில் பணிக்கு அழைத்தால் அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவார். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இருவருமே சரியாக பணியை மேற்கொள்ளவில்லை என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.எனவே இன்று அவர்கள் நடந்து கொண்ட சம்பவத்தால் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.