March 20, 2018
2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலையை எதிர்த்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐயும் மேல்முறையீடு செய்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, 2ஜி வழக்கில் குற்றம்சட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ தரப்பில் எந்த ஒரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்தார்.இதற்கிடையில், 2ஜி வழக்கில் சிபிஐ உடனடியாக மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 2ஜி வழக்கில் கனிமொழி,ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்திருந்த நிலையில் சிபிஐயும் மேல்முறையீடு செய்துள்ளது.