• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடன் தவணை செலுத்த முடியாமல் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை

February 13, 2017 தண்டோரா குழு

காருக்கு வாங்கிய கடனுக்குரிய தவணையைச் செலுத்த இயலாமல் விரக்தியில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:

ஹைதராபாத் பேகம்பேட்டையைச் சேர்ந்தவர் கொண்டையா (34). இவர் ஊபர் வாடகை டாக்சி நிறுவனத்தின் வாடகை கார் ஓட்டுநராகத் தன்னைப் பதிவு செய்திருந்தார். அதற்காக டாடா நிறுவனத்தில் கடன் பெற்று, காரை வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தார்.

இவர் காருக்கான கடனுக்குரிய தவணையாக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும். ஓரிரு மாதங்களில் தவணையை சரியாகச் செலுத்தி வந்தார். கடனை அடைப்பதற்காக அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் காரை ஓட்டினார். இருந்தபோதும், அவருக்குப் போதிய வருமானம் இல்லை. ஊபர் நிறுவனத்தில் இருந்து சரியாக சம்பளம் வருவதில்லை. தவணையைச் செலுத்த முடியாமல் மிகவும் அவதியடைந்தார்.

இந்நிலையில், நிதி நிறுவன அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கூறி வந்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். மாத தவணையைச் செலுத்த முடியவில்லை என்று தன் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கொண்டையா விஷம் அருந்திய நிலையில் வீட்டில் இருந்தார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

கடன் தவணை செலுத்த இயலாமல் கொண்டையா தற்கொலை செய்தது குறித்து அறிந்த ஊபர் மற்றும் ஓலா டாக்ஸி நிறுவன ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

“அவருடைய தற்கொலை மற்றும் கடன் பிரச்சினைக்கு ஊபர் மற்றும் டாட்டா நிதி நிறுவனம்தான் காரணம். கொண்டையா வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“உதன் நிதி திட்டத்திற்கு கீழ் ஊபர் மற்றும் டாட்டா நிதி நிறுவனத்தின் உதவியுடன் ஏழு மாதங்களுக்கு முன் டாக்ஸி ஒன்றை வாங்கினார். ஒவ்வொரு மாதமும் ரூ.2௦,௦௦௦ தவணை செலுத்த வேண்டும். அவருக்கு அதிக சம்பளமும் கிடையாது. முதல் மூன்று மாதங்கள் தவணை முறையை செலுத்தினார். ஆனால் அடுத்த நான்கு மாதங்கள் அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை” என்று கொண்டையாவின் உறவினர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க