September 1, 2026
தண்டோரா குழு
மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் விளையாட்டுத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்றும், வரும் ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்களின் செயல்பாடு மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு அரசு அளித்து வரும் ஆதரவு தற்போது உச்ச நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், புதிய விளையாட்டுக் கொள்கையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
உயர்நிலை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அதன் பலன்கள் அடிமட்ட அளவிலான விளையாட்டுத் திறமைகளையும் சென்றடைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இந்தியாவில் இளம் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பல்வேறு விளையாட்டுகளில் புதிய திறமைகள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் அபினவ் பிந்த்ரா தெரிவித்தார்.
தனது அறக்கட்டளை மூலம் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட சுமார் 250 இளம் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளில் ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.மேலும், விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கான ஒரு தளமாக மட்டுமல்லாமல், இளைஞர்களை சிறந்த குடிமக்களாகவும், ஆரோக்கியமான மனிதர்களாகவும் உருவாக்கும் முக்கிய கருவி என்றும் அபினவ் பிந்த்ரா குறிப்பிட்டார்.
இந்தியாவின் இளைஞர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும், ஒவ்வொரு இளைஞரும் விளையாட்டை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.வரும் பத்தாண்டுகளில் இந்தியாவில் விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்த அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு தொடர்ந்து மேம்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கனவுகள் மீது நம்பிக்கை – இவற்றை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே இளம் தலைமுறையினருக்கு தனது முக்கிய அறிவுரை என்றும் அபினவ் பிந்த்ரா தெரிவித்தார்.