August 2, 2026
தண்டோரா குழு
கோவை கே.எம்.சி.ஹெச் (KMCH) மருத்துவமனையில், உடல் உறுப்பு தானமளித்தோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) பாராட்டு விழாவும், தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவர் திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகளவில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அனுசரிக்கப்படும் உடல் உறுப்பு தானப் பாராட்டு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தங்களது அன்புக்குரியவர்களின் உறுப்புகளைத் தானமாக வழங்கி பலருக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களின் குடும்பத்தினர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் முதன்மை விருந்தினராக பங்கேற்று, தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவரைத் திறந்து வைத்தார். மேற்குத் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து முன்னணி மையமாக செயல்பட்டு வரும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் சேவையை அவர் பாராட்டினார்.
கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய வாழ்வை வழங்கிய உறுப்பு தானமளித்தோருக்கும், அவர்களின் குடும்பத்தினரின் தியாகத்திற்கும் மருத்துவமனை சார்பில் மரியாதை செலுத்துவதாக தெரிவித்தார்.
செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, துயரமான தருணத்திலும் சக மனிதர்களின் உயிரைக் காக்க உறுப்பு தானம் வழங்கும் குடும்பங்களின் மனிதநேயத்தை உயர்வாகப் பாராட்டினார்.
முன்னதாக மருத்துவ இயக்குநர் டாக்டர் ஏ.என்.முருகன் வரவேற்புரையாற்றினார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி. பாஸ்கர், “கே.எம்.சி.ஹெச்-ல் வாழ்வுக்குப் பின் வாழ்க்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். யுவராஜ், 2025–2026ஆம் ஆண்டிற்கான உறுப்பு தானம் தொடர்பான விவரங்களை விளக்கினார்.
மருத்துவர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உறுப்பு தானமளித்த குடும்பத்தினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வு மரக்கன்று நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இறுதியில் மயக்கவியல் நிபுணர் டாக்டர் டி. அருண்குமார் நன்றியுரை வழங்கினார்.
கல்லீரல், சிறுநீரகம், இருதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளில் மேற்குத் தமிழகத்தின் முன்னணி மையமாக விளங்கும் கே.எம்.சி.ஹெச், உறுப்பு தான விழிப்புணர்வு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.