July 4, 2026
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் உதகையில் கண்ணாடி முகப்பு பொருத்தப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றின் மீது மோதி அரிய வகை குக்குறுவான் (White-cheeked Barbet) பறவை உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட வன ஆர்வலர், உயிரிழந்த பறவையின் புகைப்படத்தையும் தகவலையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) ஒருங்கிணைப்பாளரும் வன ஆர்வலருமான மு. சிராஜ்தீன் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, பறவைகளை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், குக்குறுவான் (White-cheeked Barbet) என்பது தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய (Endemic) பறவையாகும்.
உயரமான மரங்களின் உச்சிப் பகுதிகளில் வாழும் இந்தப் பறவை, விதைகள் பரவுவதன் மூலம் காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.
மேலும், கண்ணாடி முகப்பு கொண்ட கட்டிடங்களில் மரங்களும் வானமும் பிரதிபலிப்பதால், அவற்றை திறந்த வெளி என நினைத்து பறவைகள் வேகமாக பறந்து வந்து மோதுகின்றன. இதுபோன்ற விபத்துகளால் ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் உயிரிழப்பதாகவும், இன்று உயிரிழந்துள்ள இந்த அரிய பறவையின் மரணம் பறவை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் மற்றும் பறவைகள் அதிகம் வாழும் இடங்களில் அமைக்கப்படும் கண்ணாடி கட்டிடங்களில், பறவைகள் கண்ணாடியை எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு ஸ்டிக்கர்கள், வடிவமைப்புகள் அல்லது பிரதிபலிப்பைக் குறைக்கும் கண்ணாடிகளை கட்டாயமாகப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் போது ‘பறவை பாதுகாப்பு வடிவமைப்பு’ (Bird-friendly Building Design) தொடர்பான விதிமுறைகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் அரசு துறைகளிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஒரு அரிய பறவையின் உயிரிழப்பு என்பது ஒரு உயிரின் இழப்பு மட்டுமல்ல; மேற்கு தொடர்ச்சி மலைகளின் உயிரினப் பன்முகத்தன்மைக்கும் இயற்கை வளத்திற்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று மு. சிராஜ்தீன் தெரிவித்தார்.