June 13, 2026
தண்டோரா குழு
“பெரிய பதவிகளையும் பட்டங்களையும் தலைக்கேற்றிக் கொள்ளாதீர்கள்; அவை இன்று வரும், நாளை போகும். ஆனால் கல்வியும் பண்பும் மட்டுமே வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும். எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் பணிவாக இருங்கள்” என்று மாணவர்களுக்கு அண்ணாமலை அறிவுரை வழங்கினார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள பார்க் கல்வி குழும கல்லூரிகளின் கூட்டுப் பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பிரேமா ரவி கலை அரங்கில் நடைபெற்றது.இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், ‘வி த லீடர்ஸ்’ அறக்கட்டளையின் தலைவருமான K.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 38-வது பட்டமளிப்பு விழா, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25-வது பட்டமளிப்பு விழா, பார்க் குளோபல் மேலாண்மை கல்லூரியின் 16-வது பட்டமளிப்பு விழா, தமிழ்நாடு கட்டிடக்கலை கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா மற்றும் பார்க் தொழில்நுட்பக் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தப்பட்டன.
23 பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறைகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களையும், தங்கப் பதக்கம் வென்ற மாணவருக்கு கேடயத்தையும் அண்ணாமலை வழங்கி கவுரவித்தார்.
மாணவர்களிடையே உரையாற்றிய அண்ணாமலை,
“இன்று பட்டம் பெறும் மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான். அவர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும்” என்றார்.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து பேசிய அவர், 1980-களில் கணினி உலகம் உருவாக்கிய மாற்றத்தைப் போல தற்போது AI மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெற மாணவர்கள் AI தொழில்நுட்பத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் வேலை செய்யக்கூடிய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், உலகளவில் சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக Elon Musk பல தோல்விகளைத் தாண்டியே வெற்றி பெற்றதை எடுத்துக்காட்டாகக் கூறி, தோல்விகளை அஞ்சாமல் முன்னேற வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார்.
மேலும், “இன்றைய இளைஞர்களின் கைகளில் தகவல்கள் அனைத்தும் உள்ளன. அவற்றை நல்ல வழியில் பயன்படுத்துவது அவர்களது பொறுப்பு. மனதையும் மூளையையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, கல்வியுடன் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
“பதவிகளும் பட்டங்களும் நிரந்தரமல்ல. ஆனால் பணிவும் மனிதநேயமும் என்றும் நிலைத்திருக்கும். ஆகவே எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் எளிமையையும் பணிவையும் இழக்காதீர்கள்” என்று அறிவுறுத்திய அண்ணாமலை, பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
விழாவில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.