May 8, 2026
தண்டோரா குழு
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செவ்வாய்க்கிழமை அன்று டிடிடி தலைவர். பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் புதிய டிடிடி கோயில் கட்டுவதற்காக ஜி ஸ்கொயர் குழுமம் வழங்கிய 388 கோடி ரூபாய் மதிப்புள்ள, 19.43 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்புதலானது இந்தியா முழுவதும் ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், ஆந்திரப் பிரதேசத்திற்கு வெளியேயுள்ள பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியான உள்கட்டமைப்பு வசதிகளை எளிதில் பயன்படுத்தும் வாய்ப்புகளை வலுப்படுத்துவும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
கோயம்புத்தூரின் கோவைப்புதூரில் உள்ள ‘ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி’ -ல் அமைந்துள்ள இந்த நிலம், முன்மொழியப்பட்ட கோயில் மேம்பாட்டு பணிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஜி ஸ்கொயர் குழுமத்தால் தன்னார்வத்துடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலத்தை டிடிடியின் சொத்துக்களுடன் இணைக்க அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்ததுடன், கோயில் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் வரும் மாதங்களில் தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்தக் கோயில், மேற்கு தமிழ்நாட்டில் உள்ள பக்தர்களுக்கு ஒரு முக்கிய ஆன்மீக மையமாக உருவெடுக்கும் என்றும், ஆந்திராவிற்கு அப்பால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆன்மீகச் செயல்பாடுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அருகிலேயே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில் சேவைகள் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளை எளிதாகப் பெறவும் இது வழிவகை செய்யும்.