May 2, 2026
தண்டோரா குழு
C.K. கண்ணன் தலைமையிலான வின்னர்ஸ் இந்தியா குழுமம், கல்வி, சுகாதாரம், பழங்குடியினர் நலன் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை எட்டிமடையில் செய்தியாளர்களை சந்தித்த C.K. கண்ணன்
ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளை மற்றும் வின்னர்ஸ் இந்தியா குழுமங்கள் சார்பில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கோவை மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சிறப்பாக பணியாற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்,இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களில் இருந்து மீண்ட மாணவர்கள், ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் ரேக்ளா போட்டி வெற்றியாளர்களுக்கும் வீட்டுமனைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சின்னாம்பதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 5 சென்ட் நிலம் தானமாக வழங்கியதுடன், எட்டிமடையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவும் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் பக்தர்களுக்காக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, ஓய்வு மண்டபங்கள் மற்றும் கோவில் முன் மண்டபம் கட்டியுள்ளதாகவும் கூறினார்.
மேலும் சின்னாம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியை தத்தெடுத்து, அங்கு பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், எல்லை மாகாளியம்மன் கோவிலில் தினமும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையில், வாளையார் அருகே சின்னாம்பதியில் 25 ஏக்கர் பரப்பளவில் “வின்னர்ஸ் ஹில் ரிசார்ட்ஸ்” என்ற பெயரில் புதிய சுற்றுலா மற்றும் கோடை வாசஸ்தலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ரிசார்ட்டில் நீச்சல் குளம், ஜீப் ரெய்டு, குதிரை சவாரி, விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி அரங்கு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.