April 18, 2026
தண்டோரா குழு
புற்று நோய் சிகிச்சைக்கு பிறகு அல்லது பிற காரணங்களால் உடலில் உள்ள லிம்ப் திரவம் (lymph fluid) சரியாக சுழலாமல் தங்கிவிடுவதால், குறிப்பாக கை அல்லது கால்களில் வீக்கம் ஏற்படும் நிலை ஏற்படும்.
இதனால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே சரி செய்யவும் மேலும் லிம்புடிமா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையுடன் இணைந்த பி.எஸ்.ஜி. புற்று நோய் ஆராய்ச்சி. மையத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட லிம்புடிமா சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் துவங்கப்பட்டது.
முன்னதாக இதற்கான துவக்க விழாவில், பி.எஸ்.ஜி.புற்று நோய் ஆராய்ச்சி. மையத்தின் ஆலோசகர் டாக்டர் ஸ்ருதி நஞ்சுண்டப்பன், உடற்பயிற்சி துறைத் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி,கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலாஜி மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நர்சிங் மேற்பார்வையாளர் டாக்டர் அனுராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய சிகிச்சை மையம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
புற்றுநோய் நோயாளிகள் மற்றும் லிம்பிடிமா பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் முழுமையான பராமரிப்பு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக லிம்பிடிமா நோயின் தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகள் குறித்து பயிற்சி பட்டறை நடைபெற்றது.பிசியோதெரபிஸ்ட் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற
இந்த பயிற்சியில் மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.