• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அரசுக்கு வருவாய் கிடைக்கலாம் ஆனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு தான் ஏற்படும்”

March 14, 2023 தண்டோரா குழு

நாடு முழுவதும் 815 தேசிய நெடுச்சாலை சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 53 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதுதவிர மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் சுங்கச்சாவடிகள் உள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால் அதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து தரப்பினரையும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றாலும் இதன் தாக்கம் விவசாயிகள், தொழில் முனைவோர்கள், லாரி உரிமையாளர்கள் என பல தரப்பினரின் வாழ்வாதாரம் முடங்கும் அளவிற்கு உள்ளது என கூறப்படுகிறது.

நாட்டின் முதுகு எலும்பாக விவசாயம் உள்ளது. வனவிலங்கு பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை, ஆட்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்கள் விலை உயர்வு என விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் காய்கறிகள், கால்நடை தீவனங்கள், நெல் போன்றவைகள் விவசாயம் செய்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் என வாகனங்கள் மூலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாடகை உயர்ந்துள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தால் அதனால் மேலும் வாடகை உயர்ந்து மேலும் விவசாயிகள் நெருக்கடிகளுக்கு உள்ளாவர்கள்.

இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் செயல் தலைவர் வெற்றி பழனிசாமி கூறியதாவது:

சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படும் போது விவசாயிகள் இதில் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பயிர்கள், காய்கறிகள் போன்றவைகளுக்கு விலைகள் நிர்ணயம் செய்ய முடியாது. வியாபாரிகள் தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, வாடகை உயர்வு காரணமாக விவசாயிகளினால் விளைவித்த பொருட்களின் விலையை கூட உயர்த்த முடியாத நிலையில் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அரசுக்கு வருவாய் கிடைக்கலாம் ஆனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு தான் ஏற்படும். விவசாயிகளுக்கு சுங்கச்சாவடிகளில் இருந்து கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும். சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தக்கூடாது. அனைத்து மக்களுக்கும் இது மிகப்பெரிய பாதிப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க