• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாக்கடையில் தங்க துகள் சேகரித்தபோது- விஷவாயு தாக்கி 13 வயது சிறுவன் பலி

February 22, 2023 தண்டோரா குழு

சாக்கடையில் தங்க துகள்கள் சேகரித்த போது விஷவாயு தாக்கி 13 வயது சிறுவன் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், கடைவீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது.இங்கு நகைகளை வடிவமைக்கும் போது சேதாரமாகும் கண்ணுக்கு புலப்படாத தங்க துகள்கள் பட்டறைகளை சுத்தம் செய்யும்போதும், காற்றில் பறந்தும் சாக்கடையில் கலக்கின்றன. இதேபோல், சாக்கடையில் கலக்கும் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்வதை பலர் தொழிலாக செய்து வருகின்றனர்.

குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கோவையில் நகை பட்டறை மிகுந்த பகுதிகளில் தங்கியிருந்து இந்த தங்கத் துகள்களை சேகரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர். தினசரி 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த பாலன்(40) என்பவர் உக்கடம் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரித்து வருகிறார். சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி அதில் தங்கத் துகள்கள் இருந்தால் பிரித்து எடுத்து விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக அவரது மகன் விக்னேஷ் (13) நாமக்கல்லில் இருந்து கோவை வந்தான். நாமக்கல்லில் ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், விக்னேஷ் இன்று தனது உறவினர்கள் சிலருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தான்.அப்போது எதிர்பாராத விதமாக சாக்கடையில் இருந்த விஷவாயு தாக்கி விக்னேஷ் மயங்கி விழுந்தார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

விசாரணையில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சிலவகை கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் அதன் மூலம் விஷவாயு பரவி சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. இதுதொடர்பாக வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க