February 14, 2023
தண்டோரா குழு
கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு கோயில்கள்,தியேட்டர்கள், பூங்காக்களில் காதலர்கள் குவிந்தனர். பரிசு பொருட்கள் பரிமாறிக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி பகுதிகளில் ஏராளமான காதலர்கள் குவிந்து இருந்தனர்.
மேலும், சுற்றுலா தலங்களான ஆழியார், கோவை குற்றாலம், மருதமலை, பொன்னூத்து அம்மன் கோயில், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற இடங்களில் காதலர்கள் அதிகளவில் காணப்பட்டனர். காதலர்கள் வனத்திற்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கிள் ரோஜா ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஸ்டேஷனரி கடைகளில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்பனையும் அதிகளவில் நடந்தது.காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு திருமண தம்பதிகள் முன்னிலையில் கேக் வெட்டி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.அங்கு, ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. வானில் பலூன் பறக்க விட்டு காதலர்கள் காதல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காதல் திருமணம் செய்வதன் மூலம் மட்டுமே மதம், சாதிகளை ஒழிக்க முடியும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு போலீசாரும், பொதுமக்களும் உரிய பாதுகாப்பளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.