• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு ‘சிறந்த FPO’ விருது

September 2, 2022 தண்டோரா குழு

ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தேசிய வேளாண் ஆராய்ச்சி அகாடமி (ICAR – NAARM) ‘சிறந்த வளர்ந்து வரும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் 47-ம் ஆண்டு நிறுவன நாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் விருதினை வழங்க வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார் மற்றும் ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் சுவாமி சிதம்பரா, சி.இ.ஓ. பிரேம்குமார் ஆகியோர் பெற்று கொண்டனர்.

இது தொடர்பாக குமார் கூறுகையில்,

“இன்றைய விழாவில் இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் 2 உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விருது கோவையில் செயல்படும் எங்களுடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற இவ்விருது எங்களுக்கு ஊக்கம் அளிக்கும்.

2013-ம் ஆண்டு சத்குருவின் வழிகாட்டுதலின்படி, தொண்டாமுத்தூர் பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தில் மொத்தம் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் விளைவிக்கும் தென்னை, பாக்கு, காய்கறிகள் ஆகியவற்றை நாங்கள் நேரடியாக சந்தைக்கும் விற்பனை செய்து வருகிறோம்.

முதலாண்டில் ரூ.45 ஆயிரம் Turn over ஈட்டிய எங்கள் நிறுவனம் கடந்த நிதியாண்டில் (2021-2022) ரூ.17.65 கோடி Turn over ஈட்டி சாதனை படைத்துள்ளது. நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் விவசாய உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, ஈஷா தன்னார்வலர்களின் தொடர் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சத்குருவிற்கும் ஈஷாவின் தன்னார்வலர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

இதற்கு முன்பு, இந்நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் ‘சிறந்த உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற விருதை அப்போதைய தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி கரங்களால் பெற்றது. அதேபோல், 2020-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிக்கையின் விருதை பெற்றுள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் நடந்த வேளாண் கண்காட்சியில் இந்நிறுவனத்தின் அரங்கை பாரத பிரதமர் மோடி அவர்கள் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க