• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு விஜயாலய சோழீஸ்வரர் திருக்கோவில்

October 10, 2018 findmytemple.com

சுவாமி : சிவன்.

தல வரலாறு :

விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில் சோழர்களின் முதல் மலை குகை கோவில்களில் ஒன்று, இங்குள்ள சிவன் கோவில் இடைக்கால சோழ மன்னான விஜயாலய சோழனால் கட்டபட்டது. விஜயாலய சோழன் ஸ்ரீ ராஜ ராஜ தேவரின் பட்டான் ஆவார். விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில் நார்த்தமலையில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நகரத்தார் என்று அழைக்கப்படும் வணிகர் பெருமக்கள், மன்னர்களிடம் இருந்து கோயில்கள், குளங்கள், ஆகியவற்றுக்கான மானியங்களைப் பெற்று, அவற்றை சிறப்புற நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்தப் பகுதியை நீண்ட காலமாகப் பராமரித்து வந்ததுடன், கிராம மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வரி வசூலித்தல் ஆகியவற்றிலும் முழு முனைப்புடன் செயல்பட்டு நற்பெயர் எடுத்தனர். இதானால் இப்பகுதி செல்வம் கொழிக்கும், வாணிபம் பெருகும் பகுதியாக, வணிகர்களின் தலைநகராக இருந்திருக்கிறது. குறிப்பாக, “நானாதேசத்து ஐநூற்றுவர்” என்கிற வணிகர் குழுவிற்கு தலைமைச் செயலகமாக இருந்திருக்கிறது.

இதனால், இந்த பகுதியை நகரத்தார் மலை என அழைத்து இவர்களை கௌரவித்தனர் மக்கள். இதுவே பிற்காலத்தில், நார்த்தாமலை என மருவி அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைகள் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, பொன் மலை, மண் மலை என எண்பதுக்கும் மேற்பட்ட சிறிய குன்றுகள் உள்ளன.

இவை அனைத்தும் இலங்கையில் இராமன் – இராவணன் நடத்திய போரின் போது மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து சஞ்சீவி மலையை வாயு புத்திரனாகிய அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே மலயைத் தூக்கி வரும் போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் நார்த்தாமலையில் குன்றுகளாக, மலைகளாக உள்ளன. இந்த மலைப் பகுதிகளில் அரிய மூலிகைகள் பலவும் இப்போதும் உள்ளன என்றும் சொல்கின்றனர்.

ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (between 7th AD and 9th AD), பல்லவ இராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது (‘பொன்னியின் செல்வ’னின் முதல் பாகத்தில் வந்தியத்தேவனின் “குதிரையை” பழுவூர் வீரர்கள் கிண்டலடிப்பார்களே… அந்த முத்தரையர் குலம்தான்). ஒன்பதாம் நூற்றாண்டில், விஜயாலய சோழன் முத்தரையர்களை வென்ற பிறகு தான் நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது.

முத்தரையர் தலைவனான இளங்கோ ஆதி அரையன் என்பவரால் விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகளை துவாரபாலகர்களுக்கு அடியில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தில் ஓவியங்கள் பல உள்ளன. பிற்காலச் சோழ வம்சத்தினரால் புதுப்பிக்கப்பட்டது என்பதாலேயே இத்தலதிற்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. சன்னதிகளைச் சுற்றிக்கொண்டு செல்லும் கற்சுவர்களில் பாதி இடிந்து நிலையில் உள்ளன.

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டு மூலம் இக்கோயில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப்படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோயில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தலச்சிறப்பு :

விஜயாலய சோழீஸ்வரர் கோயில் தமிழக கோவில் கட்டிடகலை வரலாற்றில் ஏற்றமிக்கதொரு இடத்தை பெறுகின்றது. வேசரா கலைப்பணியை பின்பற்றி கட்டப்பட்டதொரு கோவில் ஆகும். நார்த்தமலையிலுள்ள விஜயாலய சோழீஸ்வரத்தைக் மேற்கு நோக்கி அமைந்த இத்தலம் ஆரம்பகாலச் சோழர்பாணிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தலத்தின் அமைப்பு அசாதாரணமானது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் இருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

கருவறையில் பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. இத்தலத்தில் அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இத்தலம் கட்டுமான கற்கோயிலாகும். மூலஸ்தானத்திற்கு மேலேயுள்ள விமானம் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது.

முதல் மூன்று அடுக்குகள் சதுரமாகவும், அதற்கு மேலேயுள்ள அடுக்கு வட்டமாகவும், அதற்க்கு மேலே குமிழ்போன்ற சிகரமும் அதற்கு மேலே வட்டமான கலசமும் காணப்படுகின்றது. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. இது தமிழகக் கோயில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோயிலின் முன், மூடு மண்டபம் ஒன்று உள்ளது. சோழர் காலத்திற்கே தனித்துவமான சுவர்களும் அவற்றில் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கூரையின் உட்புறத்திற் சிறுகோயில்கள் (பஞ்சரங்கள்) உள்ளது.

முன்னுள்ள மண்டபத்தின் தூண்கள் பல்லவர் பாணியிலேயே உள்ளன. ஒரு காலின் மேல் மறுகாலை வைத்த தோற்றமுடைய இரு தூவாரபாலகர்கள் நுழைவாயிலில் உள்ளனர். ஆரம்பகாலச் சோழர் கலைப்பாணியில் இத்தலம் முக்கிய அம்சமாகும். பிரதானமான கோயிலைச் சுற்றி ஏழு துணைக்கோயில்கள் இருக்கின்றன. நீண்டு செல்லும் குன்றின் முக்கால் பங்கு உயரத்தில் விஜயாலய சோழீஸ்வரம் கோயிலும் சுற்றி ஆறு சிறு கோயில் கட்டுமானங்களும், பிரதானக் கோயிலில் நந்திக்குப் பின்னால் இரு குடைவரை கோயில்கள் உள்ளன.

முதலாவது சமணர் குடகு அல்லது பதினெண்பூமி விண்ணகரம் என்று அழைக்கப்படும் பெரிய குகை. ஏழாம் நூற்றாண்டில் சமணர் குகையாக இருந்த இந்தக் குடைவரைக் கோயில் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர விஷ்ணு சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்திற்கு முன்னுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட உருவங்களை வரிசையாகக் கொண்ட சிற்பத்தொகுதி உள்ளது.

தெற்கே உள்ள பழியிலி ஈஸ்வரம் என்ற சிறிய குடைவரை சிவன் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவராயர்களின் ஆட்சியின் கீழ் முத்தரையர் தலைவன் சாத்தன் பழியிலி கட்டியது. இத்தலம் காஞ்சி கைலாசநாதர் கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. கண்ணனூரில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயிலும், பெரிதும் இந்த அமைப்பையே கொண்டுள்ளது மற்றும் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயில் அழகான சிறிய கோயிலாகும். இத்தலமும் மேற்படி பல்லவ பாணியையே பெரிதும் ஒத்திருப்பதும், குறிப்பிடத்தக்கது.

அருகிலுள்ள நகரம் : புதுக்கோட்டை.

கோயில் முகவரி : அருள்மிகு விஜயாலய சோழிஸ்வரர் திருக்கோவில்,நார்த்தமலை, புதுக்கோட்டை மாவட்டம்.

மேலும் படிக்க