• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ அமிர்தவல்லி உடனாய ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோவில்

May 24, 2017 findmytemple.com

சுவாமி : அபிமுகேசர்.

அம்பாள் : அமிர்தவல்லி.

மூர்த்தி : சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேசுவரர்.

தலச்சிறப்பு :

அமிர்தவல்லி உடனாய ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோயிலில் மயில் மீது ஆறுமுகங்கள் பன்னிரெண்டு கரங்களுடன் அமர்ந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர், யோக நிலையில் அமர்ந்துள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, பெரிய திருவுருவில் அமைந்துள்ள ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காண்போரை கவரும்படியாக அமைந்துள்ளது தலச்சிறப்பாகும். உலகப் புகழ் பெற்ற மகாமகத் திருவிழா நடைபெறும் மகாமகக் குள புண்ணிய தீர்த்தத்தின் கீழக்கரையில் அமைந்துள்ள தலம்.

தல வரலாறு :

அனைத்தும் உலகங்களையும் ஆட்சி செய்து இன்புற ஈர்க்கின்ற பரம்பொருள் சிவபெருமான் ஒருவனை தவிர மற்ற எல்லாம் மறைந்து தோன்றுவதாகும். இச்சூழலில் உலகம் முழுவதும் அழியக்கூடிய பிரளயம் வரப்போகிறதை உணர்ந்த பிரம்மன் கயிலாயம் சென்று சிவபெருமானிடம், பிரளயம் உண்டாகப் போகிறது. அதனால் தாங்கள் சிருஷ்ட்டி பீஜங்கள், ஆகம வேதங்கள், இதிகாச புராணங்கள் காத்தருள வேண்டுமென வேண்டினான். (இந்த சிருஷ்ட்டி பீஜங்கள், ஆகம வேதங்கள், இதிகாச புராணங்கள் இருந்தால் தான் பிரளயத்திற்கு பின் மறு உலகை தோற்றுவிக்க முடியும்). பிரம்மனின் வேண்டுகோளை செவியுற்ற கயிலாயபதியாகிய சிவபெருமானும், பிரம்மனிடம் அதற்கான உபாயங்களைக் கூறி ஊழிக்கால வெள்ளம் உண்டாகும்போது யாம் அங்கு எழுந்தருள்வோம் என அருளினார்.

சிவபெருமானின் உபதேசங்களை ஏற்ற பிரம்மனும் மண்ணையும் அமுதத்தையும் ஒன்று கூட்டி ஓர் குடம் அமைத்து அதனுள் அமுதத்தையும் சிருஷ்ட்டி பீஜத்தையும் ஆகம, வேத, புராண, இதிகாசங்களையும் வைத்து மாவிலை, தேங்காய், பூணூல் சாற்றி மஹாமேருமலையில் உள்ள கோவிலில் தூய்மையான உறி ஒன்றில் அக்குடத்தை அமர்த்தி தர்பையால் கட்டி அமுதத்தை தெளித்து மஹாவில்வ தளிர்களால் பூஜைகளை செய்தார். இந்நிலையில் சில காலங்கள் சென்ற பின் பிரளய வெள்ளம் உண்டானது. ஏழு கடல் நீரும் பொங்கி பெரும் புரக்கடலில் கலந்து புயல் பெருமழை என கூடி உலகம் முழுவதும் அழியத்தொடங்கலாயின. அப்போது பிரம்மன் பூஜித்து வைத்த அமுதக் குடமானது பெருவெள்ளத்தோடு தென்திசை நோக்கி வந்து ஓர் இடத்தில் நிற்கலாயின.

அப்போது கயிலாய பதியாகிய சிவபெருமான் வேடரூபங் கொண்டு எழுந்தருளி அமுத குடத்தை நோக்கி பாணம் தொடுத்தார். பாணமானது குடத்தின் மூக்கை சிதைக்க மூக்கு விழுந்த இடம், குடுமூக்கு (கும்பக்கோணம்) எனவும் பெயர் விளங்கலாயின. அதுமட்டும் இன்றி அக்குடத்தில் இருந்த தேங்காய், மாவிலை, பூணூல், தர்பை, வில்வம், அமுதம், என அனைத்தும் பல்வேறு இடங்களில் சிதறுண்டு விழுந்தன. அவைகள் யாவும் சிவாலயங்களாகவும், தீர்த்தங்களாகவும் திகழ்கன்றன. அவைகளில் தலையாயது முக்கண் உடைய தேங்காய் ஆகும். தேங்காய் விழுந்த இடம் “நாரிகேளேச்சரம்” எனப் பெயர்பெற்று அவ்விடத்தில் கிழக்கு நோக்கி சிவலிங்கம் தோன்றி நாரிகேளேசர் என்ற திருநாமத்தோடும் அமர்ந்து அருளினார்.

பல காலங்கள் சென்றபின் கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது நதிகளாகிய கன்னிகளும், மக்களெல்லாம் நீராடி தங்களின் சாப பாபங்களை எல்லாம் எங்களிடம் சேர்ந்தமையால் நாங்கள் துன்பப்படுகிறோம் என கயிலாயபதியாகிய சிவபெருமானிடம் விண்ணப்பித்து வேண்ட அதனை செவிமடுத்த கயிலாயபதியான சிவபெருமானும் காசி விசுவநாதர் துணைகொண்டு பாஸ்கர ஷேத்ரம் எனப்படும் கும்பகோணம் சென்று மகாமககுளத்தில் புனித நீராடி ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ நாரிகேளேசப் பெருமானை வழிபட்டால் சாபபாபங்கள் நீங்கப் பெருவீர்கள் என்று அருளினார்.

கயிலாயபதியாக சிவபெருமானின் அருளை ஏற்று ஒன்பது நதிகளாகிய நவகன்னிகைகள் விஸ்வநாதர் துணைகொண்டு கும்பகோணம் வந்து மகாமகக் குளத்தில் புனித நீராடி ஸ்ரீநாரிகேளேச பெருமானை பிரார்த்திக்க அப்பொழுது கிழக்கு நோக்கி இருந்த ஸ்ரீ நாரிகேளேச பெருமான் மேற்கு நோக்கி திரும்பி (அபிமுகமாக) ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ அபிமுகேசராக காட்சி அளித்து நவகன்னிகைகள் சாப பாபங்களை போக்கி அருளினார். அது முதற்கொண்டு ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ அபிமுகேசராக அருள்பாலித்து வருகிறார்.

சுதபன் என்ற அந்தணன் மகளான சுமதி என்ற பெண் மகாமக குளத்தில் நீராடி ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ அபிமுகேசரை தரிசித்தமையால் குட்ட நோய் நீக்கப்பெற்றார். மச்ச தேசத்து மன்னன் மகன் மகாமக குளத்தில் நீராடி ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ அபிமுகேசரை வழிபட்டு ஊமை நோய் நீங்கப்பெற்றான் எனவும் திருக்குடந்தை புராணம் கூறுகிறது. இத்தலம் துலாராசிக்கு ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோவில் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற மகாமகத் திருவிழா நடைபெறும் மகாமகக் குள புண்ணிய தீர்த்தத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோவில்.

வழிபட்டோர் : பிரம்மன், நவகன்னிகைகள், சுமதி, மச்ச தேசத்து மன்னன்.

நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

மாசி மாதம் – மாசி மக திருவிழா 11 நாட்கள்,

புரட்டாசி மாதம் – நவராத்திரி விழா 10 நாட்கள்,

ஆடி மாதம் – ஆடிப்பூர விழா ஸ்ரீ ஆடிப்பூர அம்மன் புறப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்,

ஐப்பசி மாதம் – ஸ்ரீ சுவாமிக்கு அன்னாபிஷேகம்,

கார்த்திகை மாதம் – திருக்கார்த்திகை ஸ்ரீ சுப்பிரமணியர் புறப்பாடு நடைபெறும்,

மார்கழி மாதம் – திருவாதிரை ஸ்ரீ நடராஜர் புறப்பாடு நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ அமிர்தவல்லி உடனாய ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோவில்,
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க