• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்

August 29, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு அக்னீசுவரர்.

அம்பாள் : அருள்மிகு கற்பகாம்பாள்.

மூர்த்தி : அக்னீசுவரர்.

தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.

தலவிருட்சம் : பலாசம்.

தலச்சிறப்பு : இத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிரன் தலமாக விளங்குகிறது. இவ்வூரில் பிறந்து வாழ்ந்த அரதத்த சிவாச்சாரியாருக்காகக் கல்லால் ஆன நந்தி புல்லைத் தின்றது. அன்பிற் சிறந்த சுரைக்காய் பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் விரும்பி வந்து சுரைக்காய்க் கறி சாப்பிட்டான். பராசாரின் சித்தப் பிரமை, அக்னியின் சோகை, கம்சனின் வியாதி, சந்திரனின் சாபம் நீங்கிய தலம். பிரம்மனுக்குத் திருமணக் காட்சி காட்டிய தலம். சுக்கிரன் தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் இத்தலத்திற்கு அதிகம் வருகின்றனர்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். தினமும் காலையில் கஞ்சனூரில் இருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.

இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் ‘சுக்கிரன்’ என்றும் தூய வெண்மையாக வந்ததனால் ‘வெள்ளி’ என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு சான்றாக பெரியாழ்வார் தம் திருமொழியால் இவ்வாறு உரைக்கிறார்.

வழிபட்டோர் : பராசாரர், பிரம்மன், சந்திரன், கம்சன், அரதத்தர், சுரைக்காய் பக்தர், மானக் கஞ்சாறர், கலிக்காமர்.

பாடியோர் : திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு காலபூஜை.

திருவிழாக்கள் :

விநாயகர் சதுர்த்தி,

விஜயதசமி,

நவராத்திரி,

சிவராத்திரி,

ஆடிப்பூரம்,

மாசி மகம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு அக்னீசுவர சுவாமி திருக்கோவில்,கஞ்சனூர் அஞ்சல் – 609 804, திருவிடை மருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க