October 31, 2017 tamil.samayam.com
தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என தோனி மட்டுமே முடிவு செய்ய வேண்டும், வேறு யாருக்கும் இது குறித்து விமர்சிக்க தகுதி இல்லை என முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி. சர்வதேச அரங்கில் மூன்று உலககோப்பைகள் (50 ஓவர் (2011), 20 ஓவர் (2007), மினி உலகக்கோப்பை (2013) ) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர். இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற கேப்டன்களில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை நோக்கி வேகமாக முன்னேறி வரும் தோனி, தன் மீது எழுந்த விமர்சனம் காரணமாக கேப்டன் பொறுப்பை இளம் விராட் கோலியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் வரும் 2019 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு பின் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என இவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
ஆனால் இவரின் பினிஷிங் திறமை குறித்தும், பேட்டிங் பார்ம் குறித்தும், வயது குறித்தும் தற்போது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் விரைவில் ஓய்வு பெற வேண்டும் என பலரும் கருதுகின்றனர்.