August 4, 2018
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் பர்மிங்ஹாமில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்,முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் கோலி மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார்.இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 13 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி இஷாந்த் வேகத்தில் தடுமாறியது.இங்கிலாந்து அணியில் ஷாம் கரன் (63) மட்டும் அரைசதம் அடிக்க, இரண்டாவது இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன் மூலம் இந்திய அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முரளி விஜய் (6),தவான் (13)ஆகியோர் மீண்டும் ஏமாற்றமான துவக்கம் அளித்தனர்.பின்னர் களமிறங்கிய ராகுல் (13),ரகானே (2) சொதப்பலாக வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும்,மறுமுனையில் கேப்டன் கோலி நிதானமாக ஆடினார்.மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி,இரண்டாவது இன்னிங்சில்,5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.