October 22, 2018
தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின்,ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.அதில்,4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.லஞ்ச ஒழிப்புத்துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு.அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல்,வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார்.இதனையடுத்து,இதுகுறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்கப்பட்டது.அதற்கு,”எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்தது.இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.அதில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.