November 9, 2018 தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து,தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்குகளில் வைக்கப்பட்டுள்ள விஜய்யின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,படத்தின் மறுதணிக்கை இன்று காலையில் நடைபெற்றது.சென்னையில் தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி தலைமையிலான குழுவினர் மறுதணிக்கை செய்தனர்.இதையடுத்து இன்று பிற்பகலில் திரையிடப்படும் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்று கூறப்படுகிறது.
சர்கார் படத்தில் இருந்து நீக்கபட்டுள்ள காட்சிகள்:
சர்காரில் அரசின் இலவச மிக்சி,கிரைண்டர் போன்ற பொருட்களை நெருப்பில் வீசும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டுள்ளது.வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லி என்ற ஆடியோ மியூட் செய்யப்பட்டுள்ளது.டெங்கு கட்டுபடுத்த தவறிய பொதுப்பணித்துறை என்ற வசனமும் மியூட் செய்யப்பட்டுள்ளது.