October 24, 2018
தண்டோரா குழு
நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்,முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என கூறப்பட்டது.எனினும் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2–ந்தேதி சர்கார் படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.இந்நிலையில்,சர்கார் படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் திரைக்கதை தன்னுடையது என்றும்,கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். ராஜேந்திரன் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து வழக்கு நாளை விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.