October 17, 2018 தண்டோரா குழு
போராட்டத்தின் எதிரொலியாக சபரிமலை சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு முதல்முறையாக சபரிமலை கோவில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டு கோவிலின் தலைமைத் தற்திரி கண்டராரு ராஜீவரு பூஜைகள் மேற்கொள்கிறார்.ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படும்.
இதற்கிடையில்,கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்க நிலக்கல் பகுதியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.நிலக்கல்லில் பக்தர்கள் வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சி தாக்குதல் நடத்தினர்.இதில் பெண் பத்திரிக்கையார்கள் சிலரும் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.தடியடி நடத்திய போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.போலீஸ் – எதிர்ப்பாளர்கள் மத்தியில் நடைபெற்ற மோதலில் பக்தர்களில் சிலர் காயமடைந்தனர்.
தற்போது நிலக்கல்லில் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக நிலக்கல்,இளவங்கல்,பம்பை,ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.144 தடை உத்தரவானது நாளை காலை முதல் அக்.22ம் தேதி வரை அமலில் இருக்கும் என பத்தனம்திட்டா ஆட்சியர் நூகு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு,
பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.144 தடை உத்தரவு ஐயப்ப பக்தர்களுக்கு பொருந்தாது என்றும் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.