November 24, 2017
தண்டோரா குழு
ராஜஸ்தானில் பழமையான கோட்டை ஒன்றில், பத்மாவதி திரைப்படத்துக்கு எதிரான வாசகங்களுடன், தூக்கிட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சயித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படம் டிசம்பர் 1ம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில், ராணி பத்மாவதியை இழிவாக சித்தரிப்பதாக கூறி இப்படத்திற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பழமையான நாகர்கர் கோட்டையில் (Nahargarh fort) 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடலை தூக்கில் தொங்கிய நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அதன் அருகே உள்ள பாறையில், உருவபொம்மைகளை நாங்கள் தூக்கிலிட மாட்டோம் என்று கரித்துண்டால் எழுதி, பத்மாவதி என்று குறிப்பிட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த சேட்டன் சைனி (Chetan Saini) என்ற கைவினைப்பொருள் வியாபாரி என தெரியவந்துள்ளது. இது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.