December 5, 2018 தண்டோரா குழு
இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
டில்லி நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய நேரடி வரிகள் வாரியம் தலைவர் சுஷில் சந்திரா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
வருமான வரித்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.வரிகளை முன்கூட்டியே செலுத்துதல், வருமான வரித் தாக்கல், பணத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தானியங்கி மயமாக்கல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. வருமான வரித் தாக்கலுக்கான விண்ணப்பங்களும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும்.
2018- 19 ஆம் நிதியாண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து 6 கோடியே 8 லட்சத்தைக் கடந்துள்ளது. அமலாக்க பிரிவு வரி விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்போர் அல்லது வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்போர் வருமான வரி கணக்கு தாக்கலின் போது அது தொடர்பான விபரம் அளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வசதி இந்த ஆண்டு முதல் துவங்கபட உள்ளது.