October 31, 2018
தண்டோரா குழு
தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான,முன்பதிவு மையத்தினை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதற்காக நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 4,542 சிறப்பு பேருந்துகள் உள்பட 11,367 பேருந்துகளும் பிற மாவட்டங்களில் இருந்து 9200 பேருந்துகளும் என மொத்தம் 20,567பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் கோயம்பேடு,பூவிருந்தவல்லி,தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கே.கே நகர், மாதவரம் ஆகிய 6 இடங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சிறப்பு முன்பதிவு மையத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார்.கோயம்பேட்டில் 26 மையமும்,தாம்பரம் சானிட்டோரியத்தில் 2 மையமும்,மாதவரம்,பூவிருந்தவல்லியில் தலா ஒரு மையம் என 30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கூட்ட நெரிசலை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.