October 22, 2018
நேயப்பிரியன்
இன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.விஞ்ஞானம் வளர்ந்து வரும் இந்த உலகில் பாடம் படிக்கும் பள்ளியில் தொடங்கி பணியிடம்,பயணம் செய்யும் கூட்டம் நிறைந்த பஸ் மற்றும் ரயிலில் கூட பருவமடையாத பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பாலியில் சீண்டல்களுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
இந்த விஞ்ஞானத்தின் பயன்பாட்டை மனிதகுலம் புரிந்துக்கொண்ட விதமும் தவறாக உபயோகித்த விளைவும் இன்று பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல சமூக குற்றங்கள் அதிகரிக்க வழிவகுத்ததுடன்,அதே விஞ்ஞான வளர்ச்சி தான் “மீ டு” என்ற வடிவில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பல ஆயிரம் பெண்களை ஒன்றிணைத்து,பெரியமனிதர்கள் என்ற போர்வையில் வலம் வரும் காம வெறிபிடித்த கையவர்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி அவர்களின் முகத்திரையை கிழித்துள்ளது.
தற்பொழுது“மீ..டு”
வலைதளப்பக்கத்தில் இந்தியாவின் மிக முக்கியமான பிரபலங்களான அமிதாப்பச்சன்,நானா பட்டேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது பாலியல் ரீதியான புகார் பட்டியல் ஆயிரக்கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.அதில் தற்போது தென் இந்தியாவில் மிக பிரபலமாகப் பேசப்படுபவர்கள் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி மற்றும் மற்றும் ஆவணப்பட இயக்குநரும் தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளரருமான லீனா மணிமேகலையும் தான். இவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைக் காலம் கடந்து வெளியே சொன்னாலும் குற்றம் குற்றமே…,குற்ற செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
மீடு குறித்து தமிழ் திரைப்பட நடிகர் ராதாரவி சமீபத்தில் பேசிய கருத்துக்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.ஒரு நிலையான கொள்கை பிடிப்பில்லாமல் கட்சி தாவும் ராதாரவி சில மாதங்களுக்கு முன் கட்சிக்கூட்டத்தில் பேசியபோது கோயிலுக்குள் வைத்து ஒரு சமூகவிரோத கும்பலால்
பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளப்பட்ட ஒரு 8 வயது சிறுமிக்கு குரல் கொடுத்தார்.அதே ராதாரவி இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக தரம் தாழ்ந்த சர்ச்சைக்குறிய வாதங்களை முன்வைத்து வருகிறார்.இதற்கு காரணம் குற்றம் சுமத்துப்பட்டுள்ள வைரமுத்துவும் கருத்து கந்தசாமியுமான ராதாரவியும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
“அவதார வேட்டை” என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசும் போது,
“10 ஆண்டுகள் கழித்து இந்த புகாரை சின்மயி கூற காரணம் என்ன.,“சாலையில் ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது தான் சட்டம்,குளியலறையை எட்டிப் பார்த்து விட்டு அந்த சட்டத்தை பிரயோகிக்கக்கூடாது.நடிகைகளுக்கு நடுரோட்டில் வைத்து மேக்அப் போடமுடியாது தனிஅறையில் வைத்து தான் போட முடியும், அந்தமாதிரி சந்தர்பங்களில் தப்பித்தவறி படத்தின் இயக்குநர் படத்தின் அடுத்தக்கட்ட காட்சிகளை விளக்க அந்த அறைக்குள் சென்றுவிட்டால் இடுப்பை கிள்ளிவிட்டார் என்று செய்தி வந்துவிடும்.இதுபோன்ற செய்திகளுக்கு சட்டம் ஆதரவு தருகிறது.அப்படி தரம்தாழ்ந்து விளம்பரம் தேடும் நடிகைகள் ஏன் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்று பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.
நடந்ததை அப்போதே ஊடகங்கள் வாயிலாகச் சொல்லிருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் 10 ஆண்டுகள் கழித்து சொல்லி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் “மீ..டு”போன்ற ஆங்கில கலாச்சாரங்களை இங்கே கொண்டுவர வேண்டாம் என பேசியுள்ளார்.இவரின் இந்த ஆணாதிக்க,பெண்ணியத்திற்கு எதிரான பேச்சு சமூகத்தில் பல பெண்களின் எரிச்சலை மூட்டியுள்ளது”.
இது குறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கச் செயலர் ராதிகா கூறுகையில்,
வாய்க்கு வந்ததை பேசுகிறார் ராதா ரவி, காலம் கடந்து சொன்னாலும் குற்றம் குற்றமே, சில வருடங்களுக்கு முன் “மீ டூ” போன்ற விஷயங்கள் நம்மை வந்தடையவில்லை இது வரவேற்கத்தக்கது “மீ டூ”வேண்டாம்” என்று கூறும் ராதா ரவி ஏதோ பயத்தை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார். சினிமாவை மிக கஸ்ட்டப்பட்டு எடுக்கிறார்கள் என்றும், அதனால் பொருத்துப் போகச் சொல்லும் ராதா ரவி பாலியல் தொல்லைகள் சினிமாத்துறையில் மளித்துகிடப்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார் போலும், படைப்புக்கு கொடுக்கும் மரியாதையை பெண் படைப்பாளி்க்கு கொடுக்க தயக்கம் காட்டுவது மித மிஞ்சிய ஆணாதிக்கம். பெண்களை உயிரும் உணர்ச்சியும் உள்ள ஒரு மனுஷியாக்கூட பார்க்க மறுக்கிறார் ராதா ரவி. ஓட்டுமொத்த சமூகத்தின் பார்வை மாற வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி போல பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர்களை விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை பலநூறு கேள்விகள் கேட்டு அவளை மேலும் புண்படுத்தும் பழக்கத்தை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்ணை போதைப் பொருளாகப் பார்க்கும் சமூகம் அவளை ஒரு தாயாக, சகோதரியாக, தோழியாக உயிர் உள்ள ஜீவனாகப் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். சட்டம், நீதித்துறைக்கு அப்பார்ப்பட்டு பெண்களுக்கு ஒரு ஆறுதல் தரும் விஷயம் “மீ டூ”. பணியிடத்தில், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சித்துறை உட்பட பாதிக்கக்கப்பட்ட பெண்களை ஒன்றிணத்துள்ளது இந்த “மீ டூ”. இனிதான் ஆரம்பமே, “எப்போது நம் பெயர் “மீ டூ”வில் வெளியாகும்” என ஒவ்வொருத் துறையிலும் இன்றுவரை பணியிடத்தில் பாலியல் சித்தரவை அனுபவித்த தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் மற்றும் மாணவியர்களுக்கும் “மீ டூ”ஒரு ஆயுதம் மட்டுமல்ல அது ஒரு வடிகால் கூட. “We Too” -என்று நாங்கள் ஆரம்பித்தால்” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஒரு பொறுப்பில் உள்ள மத்திய அமைச்சரின் பேச்சாகத் தெரியவில்லை. பெண்களின் பாதுகாப்பில் இவரின் நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அவரின் பேச்சு. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதலாக உள்ள ஒரு வலைதள விஞ்ஞான வளர்ச்சியைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத இவர் போன்ற சர்வாதிகாரிகள் வீட்டில் பெண்களை எப்படி நடுத்துவார்கள் என்று நன்கு புரிந்துகொள்ள முடிகிறது என்று நொந்து கொண்டார்.