October 13, 2017
தண்டோரா குழு
பாரிஸ் நகரிலுள்ள வீட்டில் ஒரு சிங்கக்குட்டியை அனாதையாக விட்டுவிட்டு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர், தன்னிடம் ஒரு சிங்கக்குட்டி இருப்பதை பெருமையாக காட்டிக்கொள்ள,விலங்குகாட்சியகத்தில் இருந்து வாடகைக்கு வாங்கியுள்ளார்.பின்னர் அதனுடன் இணைந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதன் பிறகு, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் அந்த இளைஞருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் அதை அனாதையாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அந்த இளைஞர் சமூக வளைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை கண்ட காவல்துறையினர், அவர் மீது சந்தேகம் அடைந்து அந்த இளைஞரை கைது செய்தனர்.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னிடம் ஒரு சிங்கக்குட்டி இருப்பதை பெருமையாக காட்டிக்கொள்ள, அதை வாடகைக்கு வாங்கியதாகவும், பிறகு அதை அனாதையாக விட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனே காவல்துறை அதிகாரிகள்,தீயணைப்பு படைக்கு தகவல் தந்தனர். தகவலறிந்த அவர்கள், அந்த சிங்கக்குட்டியை மீட்டு, அதை விலங்குகளை பாதுகாக்கும் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு படை ஊழியர்கள் அந்த சிங்கக்குட்டியை மீட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். “காட்டு விலங்குகள் வீட்டிலிருக்கும் பொம்மையோ அல்லது வீட்டில் வளர்க்க கூடிய விலங்குகளோ இல்லை என்று மக்கள் அறிந்துக்கொள்வது மிகவும் அவசியமானது” என்று அந்த புகைப்படங்களுடன் செய்தி அனுப்பினர்.