January 24, 2018
தண்டோரா குழு
தமிழ்த்தாய் வாழத்தின்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என காஞ்சி சங்கரமடம் விளக்கமளித்துள்ளது.
சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திரர், எச்.ராஜா, சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், நூல் அகராதி வெளியீட்டு விழாவின் துவக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.அப்போது,மேடையில் இருந்த ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைவருமே எழுந்து நின்றனர். ஆனால் காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் மட்டும் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.
ஆனால், விழாவின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மட்டும் விஜயேந்திரர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். இதனால், தமிழ்தாய் வாழ்த்து என்ன அவ்வளவு அவமானமானதா என அங்கிருந்த தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்தனர்.
மேலும், தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட போது எழாத விஜயேந்திரர், தமிழை அவமதித்து விட்டதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழை அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.இந்நிலையில், தமிழ்த்தாய் வாழத்தின்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்றும்கடவுள் வாழ்த்து பாடும்போது, சங்கராச்சாரியர்கள் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம் காஞ்சி சங்கரமடம் விளக்கமளித்துள்ளது.