November 2, 2018 தண்டோரா குழு
தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் தந்த கடிதம் ஏற்கப்படவில்லை என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இயக்குனர் பாக்யராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.இதற்கிடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதையும் செங்கோல் என்ற கதையும் ஒன்று என்று இயக்குனர் வருணனுக்கு ஆதரவாக பாக்யராஜ் குரல் கொடுத்திருந்தார்.இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று படத்தின் டைட்டிலில் வருணனின் பெயர் போடுவதாக சன் பிக்ஸர் நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதற்கிடையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இன்று கே.பாக்யராஜ் கடிதம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில்,தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் தந்த கடிதம் ஏற்கப்படவில்லை என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்த போது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.மேலும்,நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில்லை என்றும்,நீங்கள் தலைவராக தொடர வேண்டும் என்று அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தையே செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டது.எனவே எப்போதும் போல தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்கிறீர்கள் என்பதை இதன் மூலம் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்”. என கூறப்பட்டுள்ளது.