January 23, 2018
தண்டோரா குழு
லவ் ஜிகாத் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருமணம் குறித்து முடிவெடுக்க ஹதியாவுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவியான, அகிலா என்ற பெண், இஸ்லாம் மீது கொண்ட பற்றால் தனது பெயரை ஹதியா என மாற்றிக் கொண்டார். பின்னர் ஷாஃபின் ஜஹான் என்பவரை ஹதியா திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிராக ஹதியாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இவர்களது திருமணம் செல்லாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஷாஃபின் ஜஹான் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய விசாரணையில் வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, திருமணம் என்பது, குற்ற நடவடிக்கை, சதி ஆகிய பிரிவுக்குள் சேராது. திருமண விவகாரங்களில் தலையிடும் பட்சத்தில் அது, தவறான முன்னுதாராணமாகி விடும். ஹதியாவின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை.ஹதியா திருமணத்தின் சட்டப்பூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்ப முடியாது.
18 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணை பெற்றோருடன் செல்லுமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஹதியாவுக்கு மட்டுமே உரிமை உள்ளது. திருமணத்தை தவிர்த்து மற்ற எதை வேண்டுமானாலும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.மேலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.