December 28, 2017
தண்டோரா குழு
மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தும் நடைமுறை மத்திய அரசால் திரும்பப்பெற உள்ளதால் இனி மாதம் தோறும் சிலிண்டர் விலை உயராது.
கடந்த ஜூலை 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து மாதம் தோறும் சிலிண்டர் விலையை 2 ரூபாய் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. காஸ் மானியம் ரத்தாகும் வரை விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. இதன்படி சரியாக எல்லா மாதமும் ரூபாய் 2 விலை உயர்ந்தது.
பின் 2017 ஜூனில் இருந்து 4 ரூபாய் விலை உயர்த்த மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது. 2018 மார்ச் வரை விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அடித்தட்டு மக்களும், மாத சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தும் வீடுகளும் மிகவும் அதிகமாக அவதிக்குள்ளாகினர். இதனால் மத்திய அரசுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
இதனையடுத்து, மக்களின் எதிர்ப்பால் மத்திய அரசு இந்த நடைமுறையை திரும்ப பெற்று இருக்கிறது. இந்த முடிவு கடந்த அக்டோபர் மாதமே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இனி வரும் காலங்களில் மாதம்தோறும் விலை உயராமல் சந்தை மதிப்பை அடிப்படையாக வைத்து அவ்வப்போது மட்டுமே விலையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.