October 25, 2017
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என அத்தொகுதி மக்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெங்கு காய்ச்சலால் மக்களின் உயிரைப்பறிப்பதாகவும்,கோவை மாநகராட்சி சதுர அடி வாரியாக குடிநீருக்கு வரியோடு கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதாகவும், குப்பைக்கு வரி விதிப்பதாகவும், புதிய சீராய்வு வரி என மக்களுக்காக மாநகராட்சி செயல்படாமல் இருப்பதாகவும், மாநகராட்சிக்காக மக்கள் என சர்வாதிகார போக்கோடு செயல்படுவதாகவும், குற்றம் சாட்டி எங்கே போனார் எம்.எல்.ஏ என்ற தலைப்பில் இந்த போஸ்டரை கிணத்துக்கடவு தொகுதி மக்கள் சுந்தராபுரம், போத்தனூர் போன்ற இடங்களில் ஒட்டியுள்ளனர்.
கேட்பதற்கு நாதியில்லை , கேட்க வேண்டிய எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ வை காணததால் தேடும் பணியில் கிணத்துக்கடவு தொகுதி மக்கள் ஈடுபட்டுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஆளும் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
இதுவரை தொகுதி பக்கம் வராத எம்.எல்.ஏ வை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரை நான்கு சக்கர வாகனத்தில் வந்த எம்.எல்.ஏ வின் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.
மேலும்,கோவை மாவட்டத்தில் தான் அதிகளவு டெங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுவரை கோவையை உட்பட நான்கு மாவட்டங்களில் 53 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர்.
டெங்கு பாதிப்பு அதிகமான கோவையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ வை காணவில்லை என பொதுமக்கள் ஒட்டிய போஸ்டர் ஆளும் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.