November 10, 2018 தண்டோரா குழு
கோவை அருகே ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டுள்ளது.
கோவை அடுத்த தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் நாள்தோறும் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்பகுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.மேலும் உடனடியாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டாவிட்டால் போராட்டங்கள் நடத்துவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து விஜய்,பொம்மன் ஆகிய கும்கி யானைகள் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டது.மேலும் இதனுடன் கோவை சாடிவயல் யானைகள் முகாமில் உள்ள ஜான்,சேரன் ஆகிய கும்கி யானைகளையும் கொண்டு அந்த காட்டு யானைகளை விரட்ட முடிவு செய்யப்பட்டு,முதல் கட்டமாக சாடிவயல் முகாமில் இருந்து ஜான்,சேரன் என்ற இரு கும்கி யானைகளும் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு துடியலூர் அடுத்த வரப்பாளையம் கிராம கடை வனப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வனப்பகுதியில் இருந்து வெளி வரும் காட்டு யானைகளை விரட்ட முடியும் எனவும்,தொடர்ச்சியாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.