November 16, 2018 தண்டோரா குழு
கோவையைடுத்த கணுவாய் பகுதியில் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளான கோவை கணுவாய்,தடாகம்,மாங்கரை உள்ளிட்டபகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.இதனிடையே கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டத்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்படுவதும் பொதுமக்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வந்தது.
இதனையடுத்து விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க வனத்துறையினர் 4 கும்கி யானைகளை கொண்டு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் காட்டு யானைகள் தொடர்ந்து இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து வருவது தொடர் கதையாகி உள்ளது.இந்நிலையில் நேற்று இரவு கோவை கனுவாய் பகுதியில் மூன்று யானைகள் சுற்றி திரிந்துள்ளன.
அதில் ஒரு யானை திரும்ப வனப்பகுதிக்குள் சென்று விட்ட சூழலில் ஒரு பெண் யானை மற்றும் அதன் குட்டி யானை ஆகிய இரண்டு மட்டும் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்திருக்கக்கூடிய பள்ளம் ஒன்றில் காலை முதல் முகாமிட்டுள்ளது.
பொதுமக்கள் ஆங்காங்கே நின்று காட்டு யானைகளை பார்வையிட்டு வருவதால் அந்த பள்ளத்தில் இருந்து வெளியே வராமல் இரண்டு யானைகளும் அதே பகுதியில் நிற்பதால் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்,காலை முதல் அங்கு மழை பெய்து வரும் நிலையிலும் வனத்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.