August 29, 2018
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பிரசவ வார்டில் அத்துமீறி நுழைந்த இளைஞரை குழந்தை கடத்த வந்தவர் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு புகாரையடுத்து,கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில் இன்று காலை பிரசவ வார்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் அத்துமீறி நுழைந்து உள்ளனர்.அப்போது பெண் காவலாளியான கீதா என்பவர், இளைஞரை பிடிக்க முயற்சித்துள்ளார்.இதனால் அச்சமடைந்த இளைஞர்,அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சித்துள்ளார்.
கீதாவின் கூச்சலையடுத்து திரண்ட,காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞரை பிடித்து கடுமையாக தாக்கினர்.இதையடுத்து,பந்தய சாலை காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.பின்னர் அந்த இளைஞரை போலீசார் அழைத்து சென்றனர்.விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.மேலும் மற்றொருவர் தான் பெண் பார்க்க வந்ததாக கூறியுள்ளார்.ஆனால் தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.