November 3, 2018
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு சிறுவன் உட்பட இரண்டு பேர் நேற்று இரவு உயிரிழந்தனர்.
கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் அமுதன்(5).இவர் கடந்த மாதம் 30 ம் தேதி விஷ காய்ச்சலின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் இவருக்கு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யபட்டது.பின்னர் சிறுவனுக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுஇருப்பினும் சிறுவனின் உடல்நிலை மோசமானதையடுத்து நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல திருப்பூர் மாவட்டம் தாசப்பா நகரைச் சேர்ந்த ராஜனின் மனைவி வசந்தா(63).இவர் கடந்த 31ஆம் தேதி பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு பதினொன்று நாற்பத்தைந்து மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் மனைவி சுமத்ரா (35).இவர் கடந்த 30ஆம் தேதி காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இவருக்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஆனால் இவர் எந்த காய்ச்சல் பாதிப்பில் உயிரிழந்தார் என்பது மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்க மறுக்கப்படுகிறது.
கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.கோவை அரசு மருத்துவர் கூறுவது போல நோயாளிகள் தங்களது நோய் முற்றிய பின்பு கடைசி நேரத்தில் தான் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.ஆகவே காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் போதே உடனடியாக பரிசோதனை செய்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு ஏற்படாது.