August 31, 2018
தண்டோரா குழு
கோவையில் கூலி தொழிலாளி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் அதேபகுதியைச் சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல் நிலையத்தில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த 29 ம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.அந்நிறுவனத்தில் இருந்து உறவினர்களுக்கு அழைத்த ஊழியர்கள் மணிகண்டன் குடித்து விட்டு போதையில் கிடப்பதாகவும்,பந்தலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர்.
உறவினர்கள் சென்று பார்த்த போது தலையில் காயத்துடன் மணிகண்டன் உயிரிழந்து கிடந்துள்ளார்.இதையடுத்து மணிகண்டன் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் மணிகண்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,வேலுசாமி உள்ளிட்டோர் அடித்தும்,கழுத்தை நெறித்து கொலை செய்திருப்பதாகவும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
மேலும்,வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வேலுசாமி தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும்,கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.