January 24, 2018
தண்டோரா குழு
கோவையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கோவை அரசுக் கலை கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் தாக்குதல் நடத்தி குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழக மாநிலம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரி முன்பாக மாணவர்கள் சாலையில் படுத்து, மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ள பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடருமென கூறிய மாணவர்கள், ஜக்டோ ஜியோ போராட்டத்தின் போது ஆசிரியர்கள் போராட்டத்தை மாணவர்கள் ஆதரித்தாகவும், ஆனால் மாணவர்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் ஆதரிக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.இதையடுத்து போராட்டம் நடத்திய 100 க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.