January 23, 2018
தண்டோரா குழு
கோவையில் பேருந்து கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தமிழக அரசு வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனைக்கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனயடுத்து மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் காவல் துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, கலைக்கல்லூரி முன் மாநில அரசுக்கு எதிராக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
பேருந்து கட்டண உயர்வால் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை எனவும்,நடுத்தர குடும்பத்தைச்சார்ந்தவர்கள் தனது சம்பளத்தில் பாதியை தினமும் 100 ரூபாய் வீதம் பேருந்துக்கு செலவு செய்ய வேண்டி உள்ளதாக குற்றம் சாட்டினர்.
மேலும் அரசு இலவசம் கொடுப்பதற்கு பதிலாக வேலை கொடுத்தால் பிரச்சனை இருக்காது எனவும், ஸ்கூட்டி வேண்டாம் வேலை வேண்டும் என வலியுறுத்தினர். கட்டண உயர்வால் நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசு கலைக்கலூரியில் படிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. வேலைக்கு செல்லும் பெற்றோர்களும் பேருந்து கட்டண உயர்வால் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வருவதாக தெரிவித்தனர்.