November 2, 2018 தண்டோரா குழு
ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று நக்சலைட் இயக்கம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர்.அவர்களுக்கு அவ்வப்போது இந்திய பாதுகாப்பு படைப்படையினர் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையில்,சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் தண்டேவாடா அருகே அரான்பூரில் ஊடுருவிய நக்சல் தீவிரவாதிகள்,அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற இரண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.பதிலுக்கு பாதுகாப்பு வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் நக்சல் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஒருவரும்,2 பாதுகாப்புபடை வீரர்களும் உயிரிழந்தனர்.
இதற்கிடையில்,செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொடூரமாகக் கொல்லப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.இதனையடுத்து,இது தொடர்பாக நக்சல் இயக்கத்தின் தலைவர் சாய்நாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,”பதுங்கியிருந்த நிலையில் பிடிபட்ட தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்த் சாஹு கொல்லப்பட்டார்.ஊடகத்தினரைக் கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை” வழக்கம் போல தங்களுக்கும் போலீசாருக்குமான மோதலின் ஒரு பகுதியே இந்த தாக்குதல் என்றும் அப்போது தூர்தர்ஷன் செய்திக்குழுவினரும் இருந்தது தங்களுக்குத் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.