October 24, 2018
தண்டோரா குழு
சிபிஐ இயக்குநர்கள் அலோக் வர்மா,ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில்,புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும்,சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.ராகேஷ் அஸ்தானா மீது தொடக்கத்தில் சில ஊழல் புகார்கள் எழுந்ததை சுட்டிக்காட்டி,அவருக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவி வழங்க தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும்,இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மாவும்,ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கிடையில்,ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து,இரு தினங்களுக்கு முன் சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி,போலீஸ் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமாரை கைது செய்தனர்.
இதனையடுத்து,பனிப்போரில் ஈடுபட்டுள்ள சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா,ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்தார். அப்போது,பிரதமர் மோடியிடம் இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது.அலோக் வர்மா,ராகேஷ் அஸ்தானா மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிபிஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர் ராவை மத்திய அரசு நியமித்தது.
தெலங்கான மாநிலம் வாரங்கலை சேர்ந்த நாகேஸ்வர் ராவ்,ஒடிஷாவின் 1986-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்.இதற்கு முன்பாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் நாகேஷ்வர் ராவ்.ரயில்வே காவல் துறையின் கூடுதல் இயக்குனராக பதவி வகித்த நாகேஷ்வர் ராவ்,கடைசியாக சிபிஐ இணை இயக்குனராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.