October 26, 2018
தண்டோரா குழு
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா,சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை கூறி வந்தனர்.இதையடுத்து,இது குறித்து மத்திய விஜிலென்ஸ் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.இதற்கிடையில்,அலோக் வர்மாவையும்,ராகேஷ் அஸ்தனாவையும் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.
இந்நிலையில்,அலோக் வர்மாவை மீண்டும் பணியில் ஈடுபட உத்தரவிடக் கோரியும்,இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க கோரியும் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் சிபிஐ அலுவலகங்கள் முன் இன்று போராட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று கண்டன பேரணி ராகுல் காந்தி தலைமையில் நடந்தது.
அப்போது சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி வந்த பேரணியை போலீஸார் தண்ணீர் பீய்ச்சி தடுத்தனர்.எனினும் அதையும் மீறி போராட்டம் நடைபெற்றதால் அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர்.பேரணியை நடத்திய ராகுல் காந்தியையும் கைது செய்து,போலீஸ் வேனில் ஏற்றினர்.
இதையடுத்து, அருகிலுள்ள லோதி காலணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் காவல் நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில்,செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,
“மோடி எங்கு வேண்டுமானாலும் ஓடி மறைந்துகொள்ளலாம்,ஆனால் இறுதியில் உண்மையே வெளிவரும்.சிபிஐ இயக்குனரை வெளியேற்றுவது மட்டும் உதவாது. சிபிஐ இயக்குனர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கை,அவரின் பயத்தை வெளிப்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.