• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

October 17, 2016 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.பல ஆயிரம் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் 48 நேர ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தனர்.

திங்களன்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே நியூ ஹால் எனும் இடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக பிரதான ரயில் நிலையமாகக் கருதப்படும் பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக அரக்கோணம், ஆவடி செல்லும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

அதேபோல் திருச்சியில் விவசாய சங்கத்தினர் நெற்கதிர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கையில் நடத்திய போராட்டத்தில் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.இதேபோல் தஞ்சையில் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து நூதனமான முறையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மூத்த அரசியல்வாதி ஆர். நல்லகண்ணு, கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தொடர் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.

தமிழகத்தில் காவிரி நீர் உரிய அளவு கிடைக்காததால் 17 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர்.

இந்நிலையில், தமிழர்கள் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சகட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுப்பட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் பல ஆயிரம் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க