November 15, 2017
தண்டோரா குழு
கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க நெல்லை குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளித்த சம்பவத்தை வைத்து சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா கார்ட்டூன் வரைந்த காரணத்தால் கைது செய்யபட்டார்.தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளர்.
இந்நிலையில், இது தொடர்பாக பாலா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், நான் சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த அக்டோபர் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்து வட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்தார் தீக்குளித்து பலியாகினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அக்டோபர் 24ம் தேதி ஒரு கார்டூன் வரைந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் தமிழக முதல்வர்,மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை பார்ப்பது போல் சித்தரித்திருந்தேன்.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 ன் படி வழக்குப்பதிவு செய்தனர். அதை தொடர்ந்து நவம்பர் 5ம் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தார்.
இந்த வழக்கின் படி நான் எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை. என்னை கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. ஆகவே, என் மீது காவல்துறையினர் பதிந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரனைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை காவல் துறையினர் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தும் இது சம்பந்தமாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு மனு மீதான விசாரனையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.