May 11, 2019
பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில் அவரது முகத்திற்கு பதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அண்மையில் நியூயார்க் நகரில் நடந்த மெட்காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் வித்தியாசமான முறையில் அணிந்திருந்த ஆடையும், தலைமுடியும் நெட்டிசன்களால் மிகவும் விமர்சிக்கப்பட்டது. அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகியான பிரியங்கா சர்மா என்பவர், பிரியங்கா சோப்ராவின் அந்த புகைப்படத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் விபாஸ் ஹஸ்ரா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், ,’ பிரியங்கா சர்மாவின் செயல், சமூக நல்லிணக்கத்தை கெடுத்து, வன்முறைக்கு அடிகோலிவிடும். முதல்வர் மம்தா பானர்ஜியை அவமானப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல்,
மேற்கு வங்க கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி உள்ளார். இது சைபர் குற்றமாக கருதலாம்,’ என்று தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார்,’ பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மாவை கைது செய்து ஹவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.