June 21, 2026
தண்டோரா குழு
கோயமுத்தூர் வைசியாள் வீதியில் அமைந்துள்ள வாசவி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமாஜ உறுப்பினர்கள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு யோகா மாஸ்டர் பி.ராஜா தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய யோகா மாஸ்டர் பி. ராஜா,
“தினசரி யோகா பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைத்து, மன அமைதியையும் அளிக்கிறது. குறிப்பாக வாசி கிரியா (Vasi Kriya) என்பது உடல், மனம் மற்றும் உயிர்சக்தியை ஒருங்கிணைக்கும் சிறப்பான மூச்சுப் பயிற்சியாகும். இதனை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலம் மேம்பட்டு, மன ஒருமைப்பாடு மற்றும் உள்ளார்ந்த அமைதி கிடைக்கும்” என்று கூறினார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல்வேறு மூச்சுப் பயிற்சி நுட்பங்களை (Breathing Techniques) நேரடியாக கற்றுக் கொடுத்து அவற்றின் பயன்களை விளக்கினார்.
யோகா பயிற்சியாளர் சுபாஷினி விஜயகுமார்,
“யோகா என்பது நோய்களைத் தடுக்கும் இயற்கையான வாழ்க்கை முறை. உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க யோகா பெரிதும் உதவுகிறது. நமது உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக பராமரித்தால், நமது மறைவுக்குப் பின்னரும் உறுப்பு தானம் மூலம் தேவைப்படுவோருக்கு வாழ்வளிக்க முடியும். ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும் அந்த உயர்ந்த தருணத்தில், நமது உறுப்புகள் மற்றொருவரின் வாழ்வில் ஒளியேற்றும். எனவே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும், யோகா பயிற்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை” என வலியுறுத்தினார்.
காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்ற யோகா பயிற்சியில் அனைத்து வயதினரும் உற்சாகமாக பங்கேற்று பயனடைந்தனர். பின்னர் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமாஜ தலைவர் ஆர். அசோகன், பொதுச் செயலாளர் வி. ராஜேந்திரன், பொருளாளர் ஏ. ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
“யோகா செய்வோம்… ஆரோக்கியமாக வாழ்வோம்!” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.