December 6, 2018 தண்டோரா குழு
டாக்டர் அம்பேத்கரின் 61-ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு செஞ்சிலுவை சங்கம் முன்பு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர்.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 61 நினைவு தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு , அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதிக்கட்சியைச்சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பெண்ணடிமைத்தனம், தீண்டாமை, கலப்புத்திருமணத்தை ஆதரித்து ஊக்குவிக்கவும், உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோவையில் பல்வேறு அமைப்புகள் இருபது ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையரிடம் மனு கொடுத்தும் இதுவரை அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக சமூக நீதி கட்சி அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து காவல் துறை செஞ்சிலுவை சங்கம் அருகே சிலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.