October 27, 2018 தண்டோரா குழு
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
“18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த உற்சாகத்தில் பங்கு கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.அதிமுக ஆட்சியும்,அதிகாரமும் மக்களுக்கு தொண்டாற்ற நமக்கு கிடைத்த கருவிகள் தானே தவிர பதவிக்காக செயல்படும் சிந்தனை நம்மில் யாருக்கும் கிடையாது.மக்கள் தொண்டு தான் நம் ஒரே குறிக்கோள்.
உயர்நீதிமன்றம் வழங்கிய நியாமான தீர்ப்பு கழக உடன் பிறப்புகளுக்கும் தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்பதற்கு ஏற்ப கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு நாம் ஒன்றுபட்டு உழைக்கும் போது நமது பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் கொண்ட இயக்கமாக விசுவரூபம் எடுத்து நமது அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் வீழ்த்தும் பெரும்படையாக உருவாகும் என்பதை நம் அன்பு சதோர சகோதிரிகள் எங்கிருந்தாலும் நினைவூட்டுகிறோம்.
மனக்கசப்பாலும்,சில தவறான வழிநடத்தலாலும் மாற்றுப் பாதையில் பயணிக்கச் சென்றவர்கள்,உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் கட்சிப் பணியாற்ற வருமாறு பாசத்தோடு அழைக்கிறோம்”. என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.