July 11, 2026
தண்டோரா குழு
கணிதத்தை மனப்பாடமாக அல்லாமல், உடல் அசைவுகள் மற்றும் பரதநாட்டியத்தின் மூலம் அனுபவப்பூர்வமாக கற்றுக்கொடுக்கும் புதிய கல்வி அணுகுமுறையை அறிமுகப்படுத்தும் ‘Move Through Math’ நூல், கோவையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
ஜெர்மனியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளரும், பரதநாட்டியக் கலைஞரும், கல்வி ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஜனனி சுரேஷ் ராம் எழுதியுள்ள இந்த நூல், கணிதம் மற்றும் Embodied Learning எனப்படும் உடல்சார்ந்த கற்றல் முறையை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் ஜெர்மனியில் மேற்கொண்ட ஆய்வுகள், பயிலரங்குகள் மற்றும் கள அனுபவங்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை பந்தய சாலையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ராதே ஜக்கி மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்விக் குழுமங்களின் நிறுவனரும் கல்வியாளருமான டாக்டர் மணிமேகலை மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.
கலைமாமணி லாவண்யா சங்கர் வரவேற்புரை ஆற்றினார். அனாதி ஃபவுண்டேஷன் இணை நிறுவனர் மற்றும் ஆய்வாளரான ஸ்மிரிதி ரேகா ஆதிநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜனனி சுரேஷ் ராம், “குழந்தைகள் கணிதத்தை எண்கள், சூத்திரங்கள் மற்றும் குறியீடுகள் வழியாக மட்டுமல்லாமல், அசைவுகள், தாளம், சைகைகள் மற்றும் விளையாட்டின் மூலம் அனுபவித்து கற்றுக்கொள்ளும் போது, அவர்களின் புரிதல் ஆழமாகவும் நீடித்ததாகவும் அமையும். அந்த எண்ணத்தின் வெளிப்பாடே ‘Move Through Math’ நூல்,” என்றார்.
5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இதில், வடிவங்கள், உருவங்கள், எண் அறிவு, கணிதச் செயல்பாடுகள், அளவீடு, தரவு பகுப்பாய்வு, இட–கால விழிப்புணர்வு உள்ளிட்ட 46 அடிப்படை கணிதக் கருத்துகள் செயல்பாடுகள் மற்றும் அசைவுகளின் வழியாக விளக்கப்பட்டுள்ளன.
கல்வி உலகில் மாற்று கற்றல் முறைகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், கணிதத்தை குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றும் இந்த நூல், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய விவாதத்தையும் வரவேற்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.